கை, கால்கள் துண்டாக்கி பெண் கொடூர கொலை.. கர்நாடகாவில் பயங்கரம்!

 

கர்நாடகாவில் பெண்ணைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை துண்டம், துண்டமாக வெட்டி ஒவ்வொரு பகுதியாக வீசிய சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேகல் தாலுகாவில் உள்ள பன்னார்கட்டா கடஞ்சி முனிமராயனடோடி கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த ஏரியின் வெறிச்சோடிய பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணின் இரண்டு கால்கள் கிடந்துள்ளன. இந்த பகுதிக்கு இன்று காலையில் சென்ற பொதுமக்கள், வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கால்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக பன்னார்கட்டா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் இரண்டு கால்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மோப்பநாய், எப்எஸ்எல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.

அதே இடத்தில் பதினைந்து நாட்கள் முன்பு பெண்ணின் கை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கை கிடைத்த அதே பகுதியில், பெண்ணின் இரண்டு கால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண்ணைக் கொன்று யாருக்கும் சந்தேகம் வராத நிலையில், அவரது உடல் பாகங்களை வெட்டி கொலையாளிகள் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதுடன், அந்த பெண்ணின் எஞ்சிய உடல் உறுப்புகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.