காதலி கையை துண்டாக்கிய காதலன்.. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம்

 

உத்தரப்பிரதேசத்தில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண்ணின் கையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ரிங்கு. இவரும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட ரிங்கு தனது காதலியை அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது திருமணத்தை நிறுத்தக்கோரி தனது காதலியிடம் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்ததாக தெரிகிறது. அப்போது இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரிங்கு காதலியின் இடது கையை வெட்டியுள்ளார். இதில் அவரது கை துண்டானது. இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். பொதுமக்களை கண்டதும் ரிங்கு அங்கிருந்து தப்பி சென்றார்.

அந்தப் பெண்ணை மீட்ட கிராமத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது மருத்துவமனையில் அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் சகோரர் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய ரிங்குவை சில  மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.