படுத்த படுக்கையான மனைவி.. கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கேரளாவில் படுத்த படுக்கையாக இருந்த மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள  மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழா அருகே உள்ள நிரப்பு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் (86). இவரது மனைவி கத்திரி குட்டி (85). இவர் உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார். ஜோசப் தனது மனைவியை கவனித்து வந்தார்.

இதற்கிடையே படுத்த படுக்கையான கத்திரி குட்டியை தொடர்ந்து கவனிப்பதில் ஜோசப் சிரமம் அடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உறங்கி கொண்டிருந்த கத்திரி குட்டியின் கழுத்தை ஜோசப் கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

பின்னர் அவர் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி மூவாட்டுப்புழா போலீசாரிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் படுத்த படுக்கையாக கிடந்த மனைவியை கவனிக்க முடியாததால் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோசப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.