தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி..!

 

தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசுதான். அதே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் மக்களால் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப் படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது. தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யக்கோரியும் அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்தார். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்குகளில் இன்று (செப். 22) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பேரியம் மற்றும் சரவெடி தொடர்பான அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது தள்ளுபடி செய்கிறோம்; இரண்டுக்குமான தடை தொடரும் என கூறிய நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. ஏற்கனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.