3 பெண்கள் மீது ஆசிட் வீச்சு... கல்லூரியில் மாணவன் வெறிச்செயல்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடாபா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடக மாநில பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகள் துவங்கியது. இதையடுத்து கல்லூரியில் மாணவிகள் அனைவரும் காலை 10 மணியளவில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென அங்கிருந்த மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசி உள்ளார்.

இதில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மூவரும் அலறித் துடித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (23) என்பதும், அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் எதற்காக மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அபின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ பயின்று வந்துள்ளார். மேலும் ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.