சிக்னல் கோளாறை சரி செய்தபோது கோர விபத்து.. ரயில் மோதி 3 ஊழியர்கள் பரிதாப பலி!

 

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் மோதியதில் 3 ரயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே வசாய் ரோடு மற்றும் நைகான் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.  

இது தொடர்பாக ரெயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அதிகாரி கூறியதாவது, வசாய் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை சிக்னல் பாயின்ட் பழுதானதால் மேற்கு ரெயில்வேயின் சிக்னல் பிரிவு ஊழியர்கள் 3 பேர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8.55 மணியளவில் அந்த வழியாக சர்ச்கேட் நோக்கி சென்ற பயணிகள் ரெயில், அவர்கள் மீது மோதியது.

இதில்  3 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள், சிக்னலிங் பிரிவு தலைமை ஆய்வாளர் வசு மித்ரா, சிக்னல் பராமரிப்பாளர் சோம்நாத் உத்தம், உதவியாளர் சச்சின் வான்கடே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.55,000 வழங்கப்பட்டுள்ளது.