புல் வெட்டும் கருவியால் மடாதிபதி வெட்டி கொலை.. கர்நாடகாவில் பயங்கரம்!

 

கர்நாடகாவில் உள்ள அன்னதானேஷ்வரர் மடத்தின் மூத்த மடாதிபதி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூர் சித்தார்த் நகரில் அன்னதானேஷ்வர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மூத்த மடாதிபதியாக இருந்தவர் சுவாமிஜி சிவானந்தா (90). இவர் மடத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரத்த வெள்ளத்தில் சுவாமிஜி சிவானந்தா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து, டிசிபி முத்துராஜ் தலைமையிலான நாசர்பாத் போலீசார் மடத்திற்கு விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்ட சிவானந்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சுவாமிஜி சிவானந்தாவின் நெருங்கிய உதவியாளரான ரவி (60) என்பவர் தான் சிவானந்தாவை படுகொலை செய்தது தெரிய வந்தது. புல் வெட்டும் ஆயுதத்தால் சுவாமிஜி சிவானந்தாவை அவர் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் சுவாமிஜி சிவானந்தாவை ரவி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிகப்படுகிறது. படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சுவாமிஜி சிவானந்தா வெட்டிக்கொலை செய்யப்படடதும் விசாரணையில் தெரிய வந்தது.

கொலை நடந்த அன்னதானேஷ்வரர் மடம் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மைசூர் மன்னர்களால் தானமாக வழங்கப்பட்ட இந்த மடத்தின் இடம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து தனது உறவினர்களுக்கு நிலத்தை சிவானந்த சுவாமி வினியோகம் செய்ததாக 2011-ம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நிலம் தருவதாக பணம் பெற்று ஏமாற்றி மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சுவாமிஜி சிவானந்தா. தம்பதியர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில், சுவாமிஜி சிவானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தவிர, சிவானந்த சுவாமிஜி தனது குருவின் கல்லறைக்கு அருகில் உள்ள மடத்திற்குள் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், அன்னதானேஷ்வர் மடத்தின் மூத்த மடாதிபதி கொலை செய்யப்பட்டது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.