அதிசய சம்பவம்.. 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடி.. உயிர் பிழைத்த 9-ம் வகுப்பு மாணவன்!

 

கர்நாடகாவில் 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் பள்ளி மாணவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு பிரஜ்வல் (14) என்ற மகன் உள்ளான். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 3-ம் தேதி வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது ஒரு பாம்பு அவனை கடித்துள்ளது.

இதையடுத்து அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகும் (அதாவது 6-ம் தேதி) அவனை பாம்பு கடித்தது. இவ்வாறு அவனை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இதற்காக அவர் 3 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானான். மேலும் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சை எடுத்துள்ளான்.

இதனால் பயந்துபோன விஜயகுமார் - உஷா தம்பதி மகனுடன் சித்தாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் 2 முறை பாம்பு சிறுவன் பிரஜ்வலை கடித்துள்ளது. அதற்கும் கலபுரகி கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி 9-வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்துள்ளது. தற்போது அவன் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுவனை தவிர பாம்பை அவரது பெற்றோர் யாரும் பார்த்ததில்லை என கூறப்படுகிறது.

எனவே விஜயகுமார் - உஷா தம்பதி, நாகதேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் 9-ம் வகுப்பு மாணவன் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.