வழிபாட்டு தலத்திற்குள் மதுபானம் குடித்த பெண்.. ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற நபர்.. பஞ்சாப்பில் பகீர் சம்பவம்!!

 

பஞ்சாப்பில் சீக்கிய குருத்வாராவில் புனித நீர் தொட்டி அருகே மதுபானம் குடித்த பெண்ணை சுட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பர்மீந்தர் கவுர் (32). சீக்கியரான இவர் அருகே உள்ள துக்நிர்வான் சஹிப் குருத்வாரா என்ற அவர்கள் மத வழிபாட்டு தலத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், பர்மீந்தர் கவுர் நேற்று (மே 14) மாலை வேளை குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் எனப்படும் புனிதநீர் இருக்கும் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதை அங்கு வழிபாட்டுக்காக வந்த மற்றொரு நபர் பார்த்து பெண்ணை கண்டித்துள்ளார். ஆனால் போதையில் இருந்த அந்த பெண்ணோ அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்குள்ளாக குருத்வார நிர்வாகிகள் அங்கு வந்து பெண்ணை மேனேஜர் அறைக்கு விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர்.

மது அருந்திய பெண் பர்மீந்தரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களும் மேனேஜர் அறை அருகே நின்றுகொண்டிருந்த போது, நிர்மல்ஜித் சிங் சைனி என்ற நபர் திடீரென தனது துப்பாக்கியால் பெண்ணை ஆத்திரத்தில் சுடத் தொடங்கினார். இதில் 3 குண்டுகள் பெண்ணின் மீது பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பர்மீந்தர் கவுர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு பக்தர் மீதும் குண்டு பாய்ந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நிர்மல்ஜித் சிங் என்ற நபரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. மத வழிபாட்டு தலத்திற்குள் இத்தகைய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.