பறக்கும் விமானத்திற்குள் பயணியை கடித்த தேள்.. ஏர் இந்தியா விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

 

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை தேள் கடித்த அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற விமானத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அன்று ஏஐ 630 ஏர் இந்தியா விமானம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை அங்கிருந்த தேள் ஒன்று கொட்டி கடித்துள்ளது.

பதறிப்போன பெண் புகார் தரவே, உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவக்குழு முதலுதவி செய்தது. குறைந்த நேரம் பயணம் என்பதால் விமான அதிகாரிகள் மும்பையில் தரையிறங்கும் வரை காத்திருந்து உடனடியாக பெண்ணை விமான நிலையித்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

பின்னர் அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பயணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தரப்படதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக கூறிய ஏர் இந்தியா நிர்வாகம் பயணிக்கு நேர்ந்த பாதிப்புக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், விமானத்தில் தேள் வந்தது எப்படி என்று உரிய ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. பொதுவாக விமானத்தில் எலி, பறவைகள் போன்றவை தான் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், பறக்கும் விமானத்திற்கு பயணியை தேள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.