தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பயணி... ஓடும் ரயிலில் பரபரப்பு சம்பவம்!!

 

ஓடும் ரயிலில் பயணி ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தில் இருந்து டெல்லி ஆனந்த் விகார் நோக்கி நார்த் இஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைஹுரி அருகே வந்தபோது ரயிலில் இருந்த பயணி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

இதை கண்ட சக பயணிகள் அலறினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ரயில் நியூ ஜல்பைஹூரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

பின்னர் ரயில்வே போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைபற்றி விசாரணை நடத்தினர். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பயணி எந்த வித அடையாள அட்டையும் வைத்திருக்கவில்லை. மேலும், அந்த பயணி ரெயிலில் பயணிக்க டிக்கெட் எதுவும் எடுக்கவில்லை. 

இதனால், தற்கொலை செய்த பயணி யார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.