வாங்கிய கடனுக்காக 11 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய்... 40 வயதுகாரர் போக்சோவில் கைது!!

 

பீகாரில் வாங்கிய கடனுக்காக பெற்ற மகளையே தாய் திருமணம் செய்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திர பாண்டே (40). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை அப்பெண்ணால் திரும்ப கொடுக்க முடியவில்லை. வாங்கிய கடனுக்கு பெண்ணின் 11 வயது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். 

ஒரே ஊர் என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் மகள் பாண்டேயின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அப்படி வந்த போது, கொடுத்த கடனுக்காக 11 வயது சிறுமியை பாண்டே திருமணம் செய்து கேட்டுள்ளார். இதற்கு பெண்ணும் சம்மதித்து உள்ளார். திடீர் என்று சிறுமியின் தாயார் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டேயை கைது செய்தனர். பாண்டேவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அச்சிறுமியின் தாயார் கூறுகையில், “என்னுடைய மகளை தன் வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாக பாண்டே தெரிவித்தார். ஆனால் படிக்க வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார். என்னுடைய மகள் எனக்கு வேண்டும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து சிறுமி கூறுகையில், “என்னுடைய தாயார் பாண்டேயிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறார். எவ்வளவு வாங்கினார் என்று தெரியாது. ஆனால் என்னுடைய தாயாரின் சம்மதத்தின் பேரில்தான் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களை என் தாயார் சிக்க வைத்திருக்கிறார்” என கூறினார்.