அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!!

 

கர்நாடகாவில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் தட்சிணக் கன்னட மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று குழந்தைகள் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

காரில் பயணம் செய்தவர்கள் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் காரில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை சுள்ளியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு பேருந்து சுள்ளியாவிலிருந்து விராஜ்பேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் மடிக்கேரி பகுதியில் இருந்து சுள்ளியாநோக்கி வந்த கார் சம்பாஜே பெட்ரோல் பங்க் அருகே ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து மடிக்கேரி புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சுள்ளியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது.