பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்..!!

 

கேரளாவில் திருமணத்திற்கு முன்பு இருந்த உறவில் பிறந்த குழந்தையின் முகத்தில் சுடுநீரை ஊற்றி கொடூரமாக கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மேலவெட்டிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீது (21). இவர் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் இவர்களது நெருக்கத்தால், நீது கர்ப்பமடைந்தார். இந்த சம்பவத்தை தனது வீட்டிற்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்துள்ளார்.

இந்த சூழலில் இவருக்கு கடந்த வாரம் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து திருமணம் ஆகாமல் குழந்தையை வளர்த்தால் பெற்றோர், உற்றார் உறவினர் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எண்ணிய இளம்பெண், தனது குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி பிறந்த குழந்தையை, யாருக்கும் தெரியாமல் கழிவறைக்கு கொண்டு சென்று, அதன் முகத்தில் சூடாக இருக்கும் தண்ணீரை ஊற்றி கொலை செய்துள்ளார் நீது. இதையடுத்து தனது குழந்தை இறந்து விட்டது போல் நாடகமாடியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதியானது.

மேலும் குழந்தையின் மூக்கிற்குள் தண்ணீர் சென்றதும், அதனால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கொலைக்கு காரணம், இளம்பெண் நீது என்று தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உண்மையை ஒப்புகொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு இருந்த உறவில் பிறந்த குழந்தையின் முகத்தில் சுடுநீரை ஊற்றி கொடூரமாக கொலை செய்த தாயின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.