தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட கல்லூரி மாணவர்.. தாய் திட்டியதால் விபரீதம்!

 

கர்நாடாகவில் கல்லூரி மாணவர் தந்தையின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேந்தவர் தம்மையா. இவர் பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக இவர் லைசென்சுடன் துப்பாக்கி வைத்துள்ளார். இவரது மகன் விஷ்ணு உத்தப்பா. இவர், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார்.

இந்த நிலையில், படிப்பு தொடர்பாக விஷ்ணுவுக்கும், அவரது தாயாருக்கும் இடையே கடந்த 3-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணுவை, தாய் கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்மையா, அவரது மனைவி இருவரும் வெளியே சென்றதாக தெரிகிறது.

வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு, தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று பிற்பகல் வீடு திரும்பிய தம்மையாவும், அவரது மனைவியும் மகன் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பெங்களூரு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஷ்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணு சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.