பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து கோர விபத்து... 12 பேர் பலி... மகாராஷ்டிராவில் சோகம்!

 

மகாராஷ்டிராவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து கோர விபத்துக்குள்ளானதில் 12 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து மும்பை நோக்கி ஒரு தனியார் பேருந்து அதிகாலை வேளையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பாஜி பிரபு வாடக் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 40 பேர் ஒன்றாக இணைந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதிகாலை 4.30 மணி அளவில் ராய்கட் மாவட்டத்தின் கோபோளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த 12 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் அனைவரையும் மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த நபர்கள் அனைவரும் 18 முதல் 25 வயதை சேர்ந்தவர்கள்.

போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேருந்தில் பயணத்தில் அனைவரும் கோரேகான், சியோன், விரார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.