ராஜஸ்தானில் 2 இதயம், 4 கால்களுடன் குழந்தை... பிறந்து சில நிமிடங்களில் உயிரிழந்த சோகம்!!

 

ராஜஸ்தானில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் 2 இதயம், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி 19 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார். அதில் கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு 2 இதய துடிப்புகள் உணரப்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்தில் அந்த பெண்மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு 2 இதயம், நான்கு கால்களுடன் பிறந்ததாக மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். 

பிரசவத்திற்கு பிறகு சுமார் 20 நிமிடங்கள் உயிரோடு இருந்த குழந்தை அதன் பின்னர் இறந்துவிட்டதாக மருத்துவர் கைலாஷ் சொங்காரா கூறியுள்ளார். பிறந்த குழந்தைக்கு ஒரு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் 2 இதயங்கள், 2 முதுகெலும்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். 

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “இவ்வளவு சிரமமான பிரசவம் சுகப்பிரசவமாக செய்ய எங்களுக்கு சிரமமாக இருந்தது, ஆனால் சரியான நேரத்தில் சுகப்பிரசவம் செய்து கர்ப்பிணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதேசமயம், பிறந்த 20 நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண் இப்போது முற்றிலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறார். இந்த வகை பிரசவம் கான்ஜுனோகல் அனோமலி என்று அழைக்கப்படுகிறது” என்றனர்.