92 வயதில் பள்ளி செல்லும் பாட்டி.. உத்தர பிரதேசத்தில் ஆச்சரியம்!

 

உத்தர பிரதேசத்தில் 92 வயது பாட்டி ஒருவர் முதல் முறையாக பள்ளிக்குச் சென்று எழுதப் படிக்க கற்றுக்கொள்ளும் சம்பவம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் சலீமா கான். இவருக்கு 14 வயதில் திருமணம் நடைபெற்றது. அவர் சிறுமியாக இருந்த போது அவரது கிராமத்தில் பள்ளிகள் இல்லையாம், இதனால் அவரால் படிக்க முடியாமல் போனது. இப்படியே அவரின் வாழ்க்கையும் நகர்ந்தது. ஆனாலும் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாக இருந்ததுள்ளது.

இந்த நிலையில்தான் 6 மாதங்களுக்கு முன்பு, தம்மைவிட 80 ஆண்டுகள் குறைந்த இளம் சிறுமிகளுடன் சலீமா கான் பள்ளிக்குச் சென்றார். அவரது பேரனின் மனைவி அவருக்கு துணையாகச் சென்றார். சமீபத்தில் அவர் ஒன்று முதல் 100 வரை எண்ணும் போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

ரூபாய் நோட்டுக்களை எண்ணத் தெரியாத நிலையில், பேரன்கள் என்னிடம் அதிக ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்துவிட்டதாக கூறி என்னை கிண்டல் செய்வார்கள் என்றும், அந்த நாட்கள் போய்விட்டன என்றும் சலீமா கான் கூறினார். படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை சலீமாவின் கதை நிரூபிப்பதாக உள்ளூர் கல்வி அதிகாரி லெட்சுமி பாண்டே தெரிவித்துள்ளார். அரசு கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் சலீமா கானை அடையாளம் கண்டு அவரை பள்ளி செல்ல ஊக்குவித்து வருகின்றனர்.

இது குறித்து பள்ளியின் முதல்வர் பிரதிபா சர்மா கூறுகையில், முதலில் சலீமா கானுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டினர். ஆனால், சலீமா கானுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை புரிந்துகொண்டு அவருக்கு கற்பித்து வருகின்றனர் என்றார். ஆர்வத்துடன் கல்வி கற்க வந்துள்ள 92 வயதான சலீமா கானை திருப்பி அனுப்ப எங்களுக்கு மனதில்லை என்கிறார். அவர் பள்ளி செல்வதைப் பார்த்து அவருடைய கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேலான பெண்கள், அவரின் மருமகள்கள் இருவர் உள்பட பலர் கல்வி கற்க வருவதாக சர்மா மேலும் கூறினார்.

கென்யாவைச் சேர்ந்த மறைந்த கிமானி நகாங்கா மருகே என்பவர் 84 வயதில் 2004ம் ஆண்டு பள்ளிக்குச் சென்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்தது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.