தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுவன் பலி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

தெலுங்கானாவில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த சாலையோரங்களில் சிறிய பொருட்களை விற்கும் குடிபெயர்ந்தவர்களான முல்கன். இவரது மனைவி சுனிதா. இவர்களது மகன் சோட்டு (7). இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி அன்று சிறுவன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய்கள் தாக்கின. நாய் ஒன்று சிறுவனின் கழுத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ தாஸ்யம் வினய் பாஸ்கர், நகர மேயர் குண்டா பிரகாஷ் ராவ் ஆகியோர் குழந்தையின் குடும்பத்தை நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.

சமீப காலமாக தெருநாய்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் கடைசி வாரத்தில் ஹனுமகொண்டாவில் மட்டும் குழந்தைகள், பெரியவர்கள் மீது என 29 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண உள்ளூர் மக்களும், புலம்பெயர்ந்தோரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.