மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுமி... உடல் கேட் கம்பியில் குத்தி உயிரிழந்த சோகம்!!

 

காரைக்காலில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி மீது கம்பி குத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீரைதோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சுகுணா குப்தா. வட மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனியார் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு சாக்க்ஷி குப்தா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. 

இந்த நிலையில் இன்று மாலை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமி கால் தவறி கீழே விழுந்துள்ளார். வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டின் மீது விழுந்த சிறுமியின் முதுகில் கேட்டின் கம்பிகள் குத்தி ரத்த வெள்ளத்தில் கதறியுள்ளார். 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.