2 மாத கர்ப்பிணியை கொன்று உடல் எரிப்பு.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!

 

கர்நாடகாவில் பணத்தகராறில் 2 மாத கர்ப்பிணியை கொன்று உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் புறநகர் கப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் நேத்ராவதி குரி (26). இவருக்கு திருமணமான நிலையில், தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேத்ராவதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். 

இந்த நிலையில் நேத்ராவதி தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட குடும்பத்தினரும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் கொப்பல் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நேத்ராவதியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தகராறில் நேத்ராவதி கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரை கொன்று பின்னர் உடல் எரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. 

ஆனால் கொலையாளிகள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து போலீசார் நேத்ராவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.