பாலியல் வன்கொடுமை செய்து 10 வயது சிறுமி தலை துண்டித்து கொலை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

 

டெல்லியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள நரேலா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர், உறவினர் சிறுமியைத் தேடினர். ஆனால், சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியை காணவில்லை என நரேலா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த நிலையில், நரேலா காவல் நிலையத்திற்கு ஒரு போன் வந்துள்ளது. அதில், சிறுமியின் உடல் ஒரு இடத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு போலீசார் சென்று பார்த்த போது காணாமல் போன சிறுமி, தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் துணியால் சுற்றப்பட்டிருந்தது. 

இதையடுத்து அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றப்பிரிவு மற்றும் தடவியல் நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். அப்போது பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது ராகுல் (20) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து ரப்பர் சிலிண்டர் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ராகுலைப் பிடித்து விசாரித்தனர். அப்போது நரோவில் குடை தொழிற்சாலையில் பணிபுரியும் தேவ்தத் (30) உடனிருந்தார். அவர்கள் இருவரும் சிறுமியை சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 363 (கடத்தல்), 302 (கொலை), மற்றும் 376 டி (கும்பல் பலாத்காரம்) ஆகியவற்றின் கீழ், குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் பிரிவு 6 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.