பைக்கை தொட்ட பட்டியிலின மாணவனுக்கு நேர்ந்த சோகம்!! கம்பியால் தாக்கிய ஆசிரியர்!!

 

உத்தரபிரதேசத்தில் இருசக்கர வாகனத்தை தொட்டதால் சிறுவன் என்றும் பாராமல் அறையில் தள்ளி இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிய ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், நாக்ரா அருகே உள்ள ரானாப்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ண மோகன் சர்மா. இந்த நிலையில், இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், விளையாடிக் கொண்டிருக்கும் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் இருசக்கர வாகனத்தை தொட்டுள்ளார். இதனை கண்ட ஆத்திரமடைந்த ஆசிரியர், உடனே விரைந்து வந்து மாணவனை கடுமையாக தாக்கியதோடு இழுத்து சென்று ஒரு அறையில் அடைந்துள்ளார்.

அங்கே கிடந்த துடைப்பம், இரும்பு கம்பி உள்ளிட்டவைகளை கொண்டு அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். வலிதாங்க முடியாமல் மாணவன் அலறிய சத்தம் கேட்டு வந்த சக ஆசிரியர்கள் உடனே அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சிறுவனின் பெற்றோர் ஆசிரியரின் இந்த கொடூர செயலை கண்டித்து பள்ளியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.


மேலும் இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், மாணவனை தாக்கிய கொடூர ஆசிரியர் மோகன் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதோடு அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பைக்கை தொட்டதால் சிறுவன் என்றும் பாராமல் அறையில் தள்ளி இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிய ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ராஜஸ்தானில் இதே போல் பட்டியலினத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் தண்ணீர் பானையை தொட்டதால் அவரை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.