ஆசியாவில் குரங்கு அம்மையால் முதல் மரணம்... கேரளவை சேர்ந்த இளைஞர் பலி 

 
கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால், இந்த நோயை மருத்துவ அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இந்நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி துபாயிலிருந்து வந்த திருச்சூரை சேர்ந்த 22 வயதான வாலிபர் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் கடந்த 27-ம் தேதி திருச்சூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. மேலும், குரங்கு அம்மை நோயின் இறப்பு சதவீதம் என்பது மிகவும் குறைவு. இதனால், இவருடைய மரணம் எப்படி நடந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவருடைய உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக ஆலப்புழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று தெரியும். இவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.