காற்றாடி நூல் வழியே பாய்ந்த மின்சாரம்.. உடல் கருகி சிறுவன் பரிதாப பலி..!

 

கர்நாடகாவில் 11 வயது சிறுவன் காற்றாடி நூலில் பாய்ந்த மின்சாரத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன் அபுபக்கர் (11). இவர் நேற்று மாலை தனது வீட்டு அருகே உள்ள பூங்காவில் நூலில் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். காற்றின் வேகத்திற்கேற்ப காற்றாடி மேலே மேலே பறந்துள்ளது. மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த சிறுவன், மேலே இருந்த உயர் மின் அழுத்த கம்பியைக் கவனிக்கவில்லை.

காற்றாடியின் நூல் எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் லேசாக உரசியுள்ளது. உடனே காற்றாடி நூல் வழியாக பாய்ந்த மின்சாரம், அதைப் பிடித்திருந்த சிறுவனை தூக்கி வீசியது. கண் சிமிட்டும் நொடியில் மின்சாரம் தாக்க, அந்த இடத்திலேயே சிறுவன் உடல் கருகி கீழே விழுந்துள்ளான்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் அபுபக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.