மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. பையை திருடிய நபரை தடுத்த மூதாட்டி அடித்து கொலை!!

 

மகாராஷ்டிராவில் தூங்கி கொண்டிருந்த பிச்சை எடுக்கும் மூதாட்டியின் பையை திருட முயன்ற நபரை தடுத்து நிறுத்தியபோது, மூதாட்டி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் டோபி காட் பகுதியில் நேற்று இரவு சாரதா கேசவ் வாக்மரே (65) என்ற பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் தூங்கி கொண்டு இருந்தார். அவரருகே, பிச்சை எடுக்க உபயோகிக்கும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்து உள்ளார். 

இந்த நிலையில், அந்த வழியே வந்த மர்ம நபர் ஒருவர் இதனை கவனித்து உள்ளார். அந்த பையில் நிறைய பணம் இருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை திருட முயன்றுள்ளார். ஆனால், அந்த நேரம் மூதாட்டி விழித்துக் கொண்டார். அவர் தனது பையை திருட விடாமல் அந்த நபரை தடுத்து உள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மூதாட்டியை அடித்து, கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அக்ரிபாடா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் சுபம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுபம் மீது மும்பையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.