கர்நாடகாவில் பதற்றம்.. பாஜக இளைஞரணி உறுப்பினர் வெட்டி படுகொலை!! முதல்வர் கண்டனம்

 

கர்நாடகாவில் ஆளும் கட்சியை சேர்ந்த இளைஞரணி உறுப்பினர் மர்ம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரவீன் நெட்டாரு. பாஜக இளைஞரணி உறுப்பினரான இவர், நேற்று மாலையில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இந்நிலையில், பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், “தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் நெட்டாரு காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆத்மா சாந்தியடையட்டும். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.