எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு.. முதன்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி!

 

எஸ்எஸ்சி தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதல்தாளில் கொள்குறி வகை கேள்விகள் இந்தி, ஆங்கில மொழிகளில் இடம்பெறும்.

இரண்டாவதுதாளில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பில் சிறிய கட்டுரை எழுத வேண்டும். அதில், ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் இந்த கட்டுரையை எழுதலாம்.

இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில், தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் முதல் தாள் கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி அல்லாத பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலன் கிடைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

இந்த பதவிக்கு நடைபெறும் எழுத்து தேர்வு இதுவரை இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே எழுத அனுமதிகப்பட்டு வந்தது. தற்போது பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்று முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் பிப். 17-ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.