காணாமல் போன கிரிக்கெட் வீராங்கனை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு.!! ஒடிசாவில் பரபரப்பு

 

ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கிரிக்கெட் வீராங்கனை, காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ ஸ்வைன் (22). இளம் கிரிக்கெட் வீராங்கனையான இவர், கடந்த 11-ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர் கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், ராஜஸ்ரீயை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கட்டாக் நகருக்கு அருகே அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கட்டாக் காவல் துணைஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. எனினும், உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்து இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும், அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் கிடந்ததுடன், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ உட்பட சுமார் 25 மகளிர் கிரிக்கெட் வீராங்கணைகள் பங்கேற்றதாகவும், இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணி ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட போது ராஜஸ்ரீ இறுதிப் பட்டியலில் இடம் பெறவிவில்லை. மறுநாள், ராஜஸ்ரீ தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக தனது பயிற்சியாளரிடம் தெரிவித்துவிட்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


போலீசார், தொடர்ந்து பல்வேறு கோணங்களை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். ராஜஸ்ரீ ஸ்வைனின் குடும்பத்தினர், ஒடிசா கிரிக்கெட் சங்கம் (ஓசிஏ) மற்றும் மகளிர் அணியின் பயிற்சியாளர் புஷ்பாஞ்சலி பானர்ஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.