இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: விக்ரம்-எஸ் வெற்றிகரமாக ஏவப்பட்டது 

 

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) நவம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது.
அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (நவ. 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது. 
இந்த ராக்கெட் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. 
ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது. இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.