அம்மாகிட்ட போறேன்; இனி என்னை தேடாதே.. கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன எம்.எல்.ஏ மகன்!!

 

புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ ஒருவரின் மகன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அங்காளன். இவர் புதுச்சேரி செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் திலகரசர்(28). இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் கவலை அடைந்த எம்.எல்.ஏ அங்காளன் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், மகனைப் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது குடும்பம் கடும் அதிர்ச்சிக்குள்ளானது.

இந்த நிலையில், திலகரசர் எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் சிக்கியது. அதில், “நான் என் அம்மாகிட்ட போறேன். இனி என்னை தேடாதே. ஓ.கே. குட் லக்” என எழுதியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்காளன், இதுகுறித்து திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன திலகரசரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0413- 2688435 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.