சரியாக படிக்கவில்லை... தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்!! ஒடிசாவில் பரபரப்பு

 

ஒடிசாவில் சரியாக படிக்கவில்லை என கூறி கல்லூரி மாணவனை அண்ணனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ்மோகன் சேனாபதி (21). கல்லூரி மாணவரான இவர், பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு பிஸ்வா மோகன் (25) என்ற அண்ணன் உள்ளார். இவர் எம்பிஏ முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இதனிடையே, கல்லூரி மாணவரான ராஜ்மோகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். 

இதனை அண்ணன் பிஸ்வா மோகன் கண்டித்துள்ளார். இதனால், அண்ணன் - தம்பி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சரியாக படிக்கவில்லை என கூறி நேற்று இரவு பிஸ்வா மோகன் அவரது தம்பி ராஜ்மோகனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜ்மோகனை அண்ணன் பிஸ்வா மோகன் கடுமையாக தாக்கினார். இதில், ராஜ்மோகன் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த ராஜ்மோகனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ராஜ்மோகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் பிஸ்வா மோகனை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது