மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும்: யுஜிசி உத்தரவு 

 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சியுஇடி தேர்வு ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். இதுபோல் நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினால், அவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை முழுமையாக திரும்பித் தர வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், சேர்க்கையை ரத்து செய்த மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் எனவும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 31-ம் தேதி வரையில்  மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

பெற்றோர்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.