உத்தரபிரதேசத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை!!

 

உத்தரபிரதேசத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில்  உள்ள கேவ்ராஜ்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த ராஜ்குமார் யாதவ் (வயது 55), அவரது மனைவி குசும் தேவி (வயது 52), மகள் மனிஷா (வயது 25), மருமகள் சவீதா (வயது 30) மற்றும் ராஜ்குமாரின் பேத்தி மீனாட்சி (வயது 2)) ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு பின் வீட்டிற்கு நெருப்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உள்ளான ராம்குமாரின் மற்றொரு பேத்தியான சாக்‌ஷி என்ற 5 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
 
மேலும் ராஜ்குமாரின் மகன் சுனில் வீட்டில் இல்லாததால் அவரும் தப்பித்துள்ளார். உயிர் தப்பிய 5 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதலில் ஒரு வீடு தீப்பிடித்துவிட்டது என்று தகவல் வந்துதான் நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கே 5 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 5 வயது குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. குழந்தையின் தந்தை சுனில் வீட்டில் இல்லாததால் அவரும் உயிர் தப்பியுள்ளார். இந்த கொலைக்கு காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரயாக்ராஜின் கங்காபர் பகுதியில் உள்ள நவாப்கஞ்ச்  ககல்பூர் கிராமத்தில் கடந்த்  15-ந் தேதி  ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கூரிய ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்ட்டனர். மேலும்  குடும்பத் தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.