ஈடிவி பாரத் பத்திரிகையாளர் நிவேதிதா சூரஜ் சாலை விபத்தில் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி வீடியோ

 

ஐதராபத்தில் ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் நிவேதிதா சூரஜ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிவேதிதா சூரஜ். கடந்த 19-ம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சூரஜ் - பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம் பெற்றவர். 2021-ம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.

இவர் ஐதராபாத்தின் பாக்யலதா பகுதியில் தங்கி நாள்தோறும் அலுவலக பேருந்து மூலமாக பணிக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோனாலி சாவ்ரே என்பவரும் ஈடிவி பாரத் ஊடகத்தின் உத்தரப் பிரதேச பிரிவில் உதவி ஆசிரியராக  பணியாற்றிவருகிறார். இவரும் பாக்யலதாவிலிருந்து அலுவலக பேருந்தில் பணிக்கு சென்று வருவார். அதன்படி, இருவரும் கடந்த 19-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டனர்.

அப்போது சாலையை கடக்கும்போது எல்.பி.நகரில் இருந்து ஹயாத் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருவர் மீதும் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் நிவேதிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சோனாலி சாவ்ரே படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே கார் ஓட்டுநர் தப்பி ஓடினார்.