தொடரும் ஆன்லைன் ரம்மி மரணம்...  கடன் தொல்லையால் சமையல் மாஸ்டர் தற்கொலை!!

 

புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லையால் சமையல் மாஸடர் தற்கொலை செய்து கொண்ட சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் திருக்கனூர் அடுத்த சோம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் அய்யனார் (29). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அய்யனார் புதுச்சேரி நகர பகுதியில் ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவர் ஓட்டல் அருகே உள்ள 3வது மாடி அறையில் சக ஊழியருடன் தங்கியிருந்தார். வார விடுமுறையில் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சமீபகாலமாக அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில்  ஈடுபட்டதாக தெரிகிறது. குடும்பத்தினருக்கு தெரியாமல் அதிகளவில் பணத்தை இழந்த அய்யனார், கடன் வாங்கியும் விளையாடியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த அய்யனார், தனது அறையில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அய்யனாரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், தற்கொலை செய்வதற்கு முன் அய்யனார், குடும்பத்தினருக்கு, என்னால் ஆன்லைன் ரம்மி விளையாடாமல் இருக்க முடியவில்லை. சிறிதளவு பணம் இருந்தால்கூட அதில்தான் எனது கவனம் செல்கிறது. இதனால் என் வாழ்க்கை வீணாகிவிட்டது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் குறுந்தகவல் அனுப்பியிருந்ததும், ஆன்லைன் ரம்மியில் அவர் ரூ.50  ஆயிரம் வரை இழந்த தகவலும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.