புதுச்சேரியில் பரபரப்பு! அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்! 

 

புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரைஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரை முகத்துவாரத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் காலை கரை ஒதுங்கியது. சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா மற்றும் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது பெண் குழந்தை என்பதும், மருத்துவமனையில் பிறந்ததற்கான அறிகுறிகள் உள்ளதால் குழந்தையை கடலில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து அரியாங்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.