உத்தர பிரதேசத்தில் கொடூரம்!! முன்னாள் காதலி தலை துண்டிப்பு.. 6 பாகங்களாக வெட்டிய காதலன்..! 

 

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் காதலியை குடும்பத்தாரின் உதவியுடன் கொலை செய்து 6 பாங்களாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் லிவ் இன்னில் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரின் காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் உள்ள கிணற்றில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கிடப்பதாக சில தினங்களுக்கு முன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கிணற்றில், அரை நிர்வாணமான, தலை இல்லாத உடலை மீட்டிருக்கிறது. மேலும், அந்த உடல் பாகத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு, அந்த உடல் ஆராதனா (20) என்ற பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. 

இந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில்,  “ஆராதனா என்ற பெண்ணை அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக்பூர் கிராமத்தில் வசித்து வந்த யாதவ் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஆராதனாவை அவருடைய குடும்பத்தினர் வேறொரு நபருக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த யாதவ், தன் பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். 

திருமணத்துக்கு பிறகும் ஆராதனாவும், யாதவும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 9-ம் தேதி யாதவ் ஆராதனாவை தன்னுடைய பைக்கில் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு ஆராதனாவை கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு தன் உறவினரான சர்வேஷின் உதவியுடன், கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் இருவரும் ஆராதனாவின் உடலை 6 பகுதிகளாக வெட்டி பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசியிருக்கிறார்கள். அதன்பிறகே ஊர் மக்களால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

குற்றம்சாட்டப்பட்ட யாதவை ஆராதனாவின் தலைப் பகுதியை கண்டெடுக்க நேற்று அழைத்துச் சென்றபோது, அங்கே அவர் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து எங்களை சுடத் தொடங்கினார். அவரிடமிருந்து தற்காத்துக்கொள்ள அவர் காலில் சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த வழக்கில் இதுவரை கூரிய முனைகள் கொண்ட ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. தலைமறைவாகியிருக்கும் சர்வேஷை தேடி வருகிறோம். விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறினார்.