கேரளாவில் கொடூர சம்பவம்! பிரிந்து வாழும் மனைவியின் கைகளை வெட்டிய கணவன்!!

 

கேரளாவில் தன்னிடமிருந்து பிரிந்து வாழும் மனைவியின் கைகளை கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழாம்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ். இவருக்கும் வித்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் ஒரு வருடம் மட்டுமே சேர்ந்த வாழ்ந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் கணவனைப் பிரிந்த 5 வருடங்களாக மனைவி வித்யா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும், இருவரும் விவாகரத்துக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் வித்யாவின் வீட்டிற்குள் புகுந்த சந்தோஷ், திடீரென அவரை அடித்து தாக்கியதுடன், தான் கொண்டுவந்த பட்டாகத்தியால் வித்யாவின் ஒரு கையை மணிக்கட்டு வரையும், மற்றொரு கையை முழங்கை வரையும் துண்டாக வெட்டியுள்ளார். மேலும், முடியையும் வெட்டியதாகத் தெரிகிறது.

இதை தடுக்க முயன்ற வித்யாவின் தந்தை விஜயனையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் வித்யா மற்றும் அவரது தந்தை இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே சந்தோஷை வித்யாவின் வீட்டிற்கு அருகில் பார்த்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை தேடிவந்தனர். பின்னர் அவரது செல்போன் சிக்னலை கொண்டு தலைமறைவாக இருந்து சந்தோஷை போலிஸார் கைது செய்துள்ளனர்.