தட்சிண கன்னடாவில் மேலும் ஒரு இளைஞர் படுகொலை!! கர்நாடகாவில் பதற்றம்.. 144 தடை உத்தரவு!

 

கர்நாடகாவில் நேற்று இரவு முகமது பைசல் என்ற இளைஞரை மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரவீன் நெட்டாரு. பாஜக இளைஞரணி உறுப்பினரான இவர், கடந்த 26-ம் தேதி மாலையில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.  இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாக்கீர் (29), சஃபிக்யூ (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ. ஆகிய அமைப்புகளை சேர்ந்த 21 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சூரத்கல் மங்கல்பெட் பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வெளியே நேற்று இரவு 8 மணியளவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த கும்பல் பைசல் மீது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த முகமது பைசல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பைசல் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து சூரத்கல், முல்கி, பனம்பூர், பஜ்பி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடாவில் 3 நாட்களில் 2 கொலைகள் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் தொடரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவை சேர்ந்த பைசல் ஷியா பிரிவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதற்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாகவும் இதன் காரணமாக பைசல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.