அம்பானி குடும்பத்தின் பிரம்மாண்ட விழா.. மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்ட ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்!

 

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் நேற்று மிக பிரம்மாண்டமாக நடந்தது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதியின் 3வது மகன் ஆனந்த் அம்பானி. இவர், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட் பார்ம்கள் மற்றும் ரீடெயில் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக இருந்தவர், தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார்.

அதேபோல், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலாவின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். ஆனந்த் மற்றும் ராதிகா இடையே, சில ஆண்டுகளாக அறிமுகம் இருந்துள்ளது.

இந்த நிலையில், பெற்றோரின் அனுமதியோடு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இருவரும் நேற்று பிரம்மாண்ட விழாவில் மோதிரம் மாற்றி திருமணம் நிச்சயித்துக்கொண்டனர்.

இருவரின் நிச்சயதார்த்தமானது குடும்பத்தினர் நண்பர்கள் சூழ நேற்று மாலை 7 மணிக்கு துவங்கியது. குஜராத்தை சேர்ந்த இந்துக்கள் கடைபிடிக்கப்படும் கோல் தானா (Gol Dhana) மற்றும் சுனரி விதி (Chunari Vidhi) சடங்குகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் கோல் தனா என்பது நிச்சயதார்த்தத்திற்கு முன் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு.

மனமகளின்குடும்பத்தினர் மனமகனின் வீட்டுக்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவர். பின்னர் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்வர். மோதிரம் மாற்றிக்கொண்டதற்கு பின் மணமக்கள் இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர்.

பின்னர் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் உள்ளிட்ட இருவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் நன்றாக நடைபெறவேண்டும் என கிருஷ்ண பகவானை வேண்டிக்கொண்டனர். பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்று, கணேஷ் பூஜையுடன் நிச்சயதார்த்தத்தை தொடங்கினர்.


அதனைத் தொடர்ந்து திருமண நிச்சயத்தை குறிக்கும் லக்கின பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவித்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் ஆற்றல் சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.