இளைஞர் வயிற்றில் சிக்கிய அடிபம்ப் கைப்பிடி.. கட்டர் மூலம் வெட்டி அகற்றிய பொதுமக்கள்!!

 

ஆந்திராவில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் போர் அடிப்பம்பு மீது மோதி விபத்தில் சிக்கியதில் அவரது வயிற்றை துளைத்து அடிப்பம்பு கைப்பிடி உள்ளே புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரி பகுதியில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் நேற்று அதிகாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த அடிப்பம்பு மீது மோதியது.

அப்போது அடிப்பம்பு கைப்பிடி வயிற்றை துளைத்து உள்ளே சென்று விட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார். அவரது நிலையை பார்த்த பலரும் நாகராஜ் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த நாகராஜின் தந்தை உடனடியாக மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் கட்டரை கொண்டு வந்து மகன் வயிற்றில் சிக்கிகொண்டிருந்த அடிப்பம்பு கைப்பிடியை வெட்டினர். பின் அவரை அங்கிருந்து ஆம்புலனஸ் மூலம் ஓங்கோலில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இதையடுத்து மருத்துவர்கள் காயமடைந்திருந்த நாகராஜுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் சிக்கி கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள், உலர்ந்த பெயிண்ட் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.