ஒடிசாவில் பள்ளி மாணவர்களை அடித்த கணக்கு ஆசிரியர் கைது.. 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

 

ஒடிசாவில் பள்ளி மாணவர்களை கண்மூடித்தனமாக அடித்ததில் 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் சுனாமுஹின் பகுதியில் உள்ள பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கல்பதரு மல்லிக். இவர் அப்பள்ளியில் உள்ள 8-ம் வகுப்பு மாணவர்களிடம் கணக்கு பாடத்தில் வடிவியல் பற்றி கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு மாணவர்கள் சிலர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனை தொடர்ந்து, ஆசிரியர் பதிலளிக்காத 14 மாணவர்களை கண்முன் தெரியாமல் அடித்து உதைத்து இருக்கிறார். அவர்களில் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்பின் தங்களது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்தது குறித்து மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கோபமடைந்த பெற்றோர் பள்ளி வளாகத்திற்கு படையெடுத்து வந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர். ஆனால், மாணவர்களை அந்த அளவுக்கு அடிக்கவில்லை என்றும் அவர்கள் மிகைப்படுத்தி கூறுகின்றனர் என்றும் கணக்கு ஆசிரியர் கல்பதரு கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், ஆசிரியர் கல்பதருவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து ஆசிரியர் கல்பதருவை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.