10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்! ஒன்றிய அரசு அறிவிப்பு

 

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதிப்பிக்க வைண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்திய குடிமக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அடையாள அட்டை உள்ளது. வங்கி கணக்கு துவங்குவது முதல் அரசின் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் இன்றியமையாததாகிவிட்டது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் ப்ரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 12 இலக்க அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது. 

இந்த நிலையில் தான் ஆதார் கார்டு வைத்திருக்கும் பயனர்கள் பயோமெட்ரிக், பெயர், முகவரி போன்ற புள்ளி விபரங்களை அப்டேட் செய்துக் கொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. அதே சமயம் 70 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டுமென ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு பிறகு, அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். இது மத்திய அரசின் தரவு களஞ்சியத்தில் தகவல்களை துல்லியமாக உறுதிப்படுத்துவதுடன், ஆணையம் குறிப்பிடும் காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும். 

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஆதார் அட்டையைப் பெற்று, அதன் பிறகு இதுவரை புதுப்பிக்காத நபர்கள், அத்தகைய ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆவணங்களைப் அளித்து புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.