உத்தரபிரதேசத்தில் ஓட ஓட விரட்டி சுட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்.. பதைபதைக்கும் வீடியோ!

 

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் கிருஷ்ணா கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தவர் ஷமிக். இவர் நேற்று முன்தினம் தனது வகுப்பு தோழி ஹிஜ்பாவுடன் கல்லூரி முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு அவர்கள் இருவரும் வெளியே வந்தனர்.

அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென துப்பாக்கியால் ஷமிக்கை நோக்கி சுட்டனர். அவர்களிடமிருந்து ஷமிக் தப்பி ஓடினார். ஆனால், அவர்கள் பின் தொடர்ந்து வந்து துப்பாக்கியால் சுட்டனர். முதல் குண்டு ஷமிக்கின் காலிலிலும், அடுத்த குண்டு மார்பிலும் பாய்ந்தது. இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க கல்லூரியை நோக்கி ஷமிக் ஓடியுள்ளார். 

இதனால் துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தைக் கண்ட பதறிப்போன மாணவர்கள், ஷமிக்கை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீசார் நேற்று மாலை வெளியிட்டுள்ளனர்.