தடுப்பு சுவரில் போலீஸ் வாகனம் மோதி கோர விபத்து!!  எஸ்ஐ உள்பட 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்

 

ஆந்திராவில் வழக்கு விசாரணைக்காக வந்தபோது தடுப்பு சுவரில் போலீஸ் வாகனம் மோதி எஸ்ஐ உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்கள் அவினாஷ், தீட்சித் மற்றும் காவலர்கள் அணில், சரவணா, பஸ்வா ஆகியோர் வழக்கு விசாரணைக்காக இன்று காலை காரில் திருப்பதி நோக்கி சென்றனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பூதலப்பட்டு - நாயுடுபேட்டை சாலையில் உள்ள சவுடேபல்லி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் அவினாஷ், காவலர் அணில், கார் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். காவல் உதவி ஆய்வாளர் தீட்சித், காவலர்கள் சரவணா, பஸ்வா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தூர் டிஎஸ்பி சுதாகர்ரெட்டி தலைமையிலான போலீசார் விபத்தில் பலியான 3 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் அதிவேகமாக வந்தபோது டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த விபத்து காரணமாக திருப்பதி - வேலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது.