இ-ஸ்கூட்டர் சார்ஜிங் பிரிவில் பெரும் தீ விபத்து.. 8 பேர் பலி! தெலுங்கானாவில் சோகம்!

 

தெலுங்கானாவில் இ-ஸ்கூட்டர் சார்ஜிங் பிரிவு ஒன்றின் தரை தளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில், அந்த பிரிவில் நேற்றிரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டதுள்ளது. இந்த விபத்தால் ஏற்பட்ட கரும் புகையானது முதல் மற்றும் 2வது தளங்களுக்கும் சென்றுள்ளது.

இதில், ஓட்டலில் தங்கியிருந்த நபர்களில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஒரு சிலர் கீழே குதித்து சென்று தப்பியுள்ளனர். சிலரை அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஓடி சென்று மீட்டனர். அவர்கள் பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஐதராபாத் ஆணையாளர் சி.வி. ஆனந்த் தெரிவித்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து, தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி வருத்தம் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து மாநில அரசு விசாரித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் முடிந்த அளவிலான சிறந்த பணியை செய்துள்ளனர். ஓட்டலில் இருந்து பலரை மீட்டுள்ளனர். எனினும் பெரும் புகையால் சிலர் உயிரிழந்து உள்ளனர். சிலர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.