3 வயது மகளைக் கொன்று ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசிய கொடூர தாய்.. கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்!

 

ராஜஸ்தானில் தாய் ஒருவர் தன்னுடைய 3 வயது குழந்தையைக்கொன்று ஓடும் ரயிலிலிருந்து தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுனிதா. 5 குழந்தைகளுக்கு தாயான சுனிதா, தற்போது கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சுனிதா 2 குழந்தைகளையும், அவருடைய கணவர் 3 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். இந்த நிலையில், கணவனை விட்டுப் பிரிந்துவாழும் சுனிதாவுக்கு, சன்னி என்ற நபருடன் திருமணம் மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுனிதா - சன்னி ஆகிய இருவருக்கும் 3 வயது பெண் குழந்தை கிரண் தொல்லையாக இருப்பதாகச் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து, அந்தக் குழந்தையைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில், சுனிதா சன்னியின் உதவியுடன் தன்னுடைய மகள் கிரணை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். மேலும், காதலன் சன்னியின் உதவியுடன் உடலை ஒரு போர்வையில் போர்த்திக்கொண்டு ஸ்ரீகங்காநகர் ரயில் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து காலை 6.10 மணிக்கு ஒரு ரயிலில் ஏறிய இருவரும் ஃபதுஹி ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒரு கால்வாயில் குழந்தையின் உடலைத் தூக்கி எறிந்திருக்கிறார்கள். ஆனால், உடல் கால்வாயில் விழாமல், தண்டவாளத்துக்கு அருகிலேயே விழுந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. சிறுமியை அடையாளம் கண்ட போலீசார், சுனிதாவிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையில், அவர் தன்னுடைய மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.