பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலி!! கர்நாடகாவில் பரபரப்பு

 

கர்நாடகாவில் பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பிச்சனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சுவாமி. இவரது மனைவி உமா. இந்த தம்பதிக்கு ரக்ஷா (4) என்ற மகள் உள்ளார். இவள் கனகபுராவில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி வேனில் ரக்ஷா வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள். வேனின் படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் ரக்ஷா அமர்ந்து இருந்தாள். அப்போது பிச்சனஹள்ளி பகுதியில் வேன் சென்ற போது வேனின் படிக்கட்டு கதவு திறந்து இருந்து உள்ளது.

இதனை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் ரமேஷ் வேகமாக ஓட்டி சென்று உள்ளார். அப்போது வேன் ஒரு திருப்பத்தில் திரும்பியது. இந்த சந்தர்ப்பத்தில் வேனில் இருந்து ரக்ஷா சாலையில் தவறி விழுந்தாள். அப்போது வேனின் பின்பக்க சக்கரம் ரக்ஷா மீது ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரக்ஷா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகபுரா புறநகர் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் ரமேஷ் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.