ஹஜ் புனிதப்பயணம் சென்ற 98 இந்தியர்கள் பரிதாப பலி.. வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

 

நடப்பாண்டில் ஹஜ் யாத்திரையின்போது இதுவரை 98 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை தங்கள் முக்கிய மதக்கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர். அதன்படி, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்கா மதினாவுக்கு இஸ்லாமிய மதத்தினர் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஹஜ் புனிதப் பயணம் மே 9 முதல் ஜூலை 22 வரை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவின் மெக்காவில் குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடப்பாண்டில் 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இயற்கை மரணம், வயது மூப்பு மற்றும் விபத்து போன்ற காரணங்களால் 98 இந்தியர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ஹஜ் காலத்தில் 187 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.